நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றவர்கள், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கிராவல் மண் உள்ளிட்ட மண்ணையும் சட்டவிரோதமாக அள்ளி விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஆட்சிக் காலத்திலேயே ஏரியில் இருந்து அதிகளவில் வண்டல் மண் மற்றும் கிராவல் மண் எடுக்கப்பட்டதால், ஏரியின் பல பகுதிகளில் பாறைகள் வெளிப்படும் அளவுக்கு ஆழமான பள்ளங்கள் உருவாகியுள்ளன. மேலும், சில இடங்களில் கிணறு போன்ற ஆழமான குழிகளும் தோண்டப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.தற்போது, வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதியை பயன்படுத்தி, கிராவல் மண்ணையும் சட்டவிரோதமாக அள்ளி விற்பனை செய்து வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும், ஏரியில் உள்ள நான்கு கிணறுகள் மற்றும் பிற நீராதாரங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கிராம மக்களின் குடிநீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.எனவே, சேலம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, ஏரியில் எவ்வளவு அளவு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதுவரை எவ்வளவு மண் எடுக்கப்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டு, சட்டவிரோத மண் அள்ளுதலை உடனடியாக தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாவக்குறிச்சி கிராம பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சேலம் செய்தியாளர் பாலமுருகன்