
கோவை : தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மற்றும் புதிய விதிகள் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 மற்றும் அதன் புதிய விதிகள், 2023-ன் படி, பொது இடங்களில் விளம்பரத் திரைகள் (Electronic display screens), விளம்பரப் பலகைகள் (Hoardings) அல்லது பேனர்களை வைக்க விரும்பும் தனிநபர்களோ அல்லது நிறுவனங்களோ குறைந்தது 15 நாட்களுக்கு முன்பே மாநகராட்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான உரிய கட்டணத்தைச் செலுத்தி, மாநகராட்சியிடம் இருந்து முறையான ஒப்புதல் கடிதத்தைப் பெற்ற பின்னரே விளம்பரங்களை வைக்க வேண்டும்.
அனுமதியின்றி விளம்பரங்களை வெளியிடும் பட்சத்தில், விளம்பரம் கொடுத்த நிறுவனங்கள் மட்டுமன்றி, அந்த விளம்பரங்களை அச்சிட்ட அச்சகங்கள் (Printing Agencies) மீதும் கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறைத்தண்டனை மற்றும் அபராத விபரங்கள்
விதிமீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் சட்டம் 117-U பிரிவின் கீழ் வகுக்கப்பட்டுள்ளன:
விளம்பரப் பலகைகள் (Hoardings):
மாநகராட்சி அனுமதியின்றிப் பெரிய அளவிலான விளம்பரப் பலகைகள் அல்லது இரும்பு உள்கட்டமைப்புகளை நிறுவுபவர்களுக்கு
3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
அல்லது
₹20,000 அபராதம்
, அல்லது இவ்விரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படலாம்.
பிளெக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள்:
தற்காலிக பிளெக்ஸ் பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுபவர்களுக்கு
ஓராண்டு வரை சிறைத்தண்டனை
அல்லது
₹5,000 வரை அபராதம்
, அல்லது இவை இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.